Wednesday, July 12, 2006

செப்.01க்கு பிறகு போரா? பேச்சுவார்த்தையா?

போர் நிறுத்த உடன்பாட்டை கண்காணிக்க வேண்டிய கண்காணிப்புக் குழு விவகாரம் தற்போது சர்ச்சைக்குரிய விடயமாகிவிட்டது. இதற்கான தீர்வினை எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதிக்கு இடையில் சாதகமாக காணாதவிடத்து அதற்குப் பின்னரான சூழல் எவ்வாறு அமையப் போகின்றது என்பது குறித்து சிந்திக்கின்ற போது அதில் பல விடயங்கள் உள்ளன.

ஐரோப்பிய ஒன்றியம் சிங்கள தேசத்தின் அர்த்தமற்ற பிரசாரங்களால் விடுதலைப்புலிகளை தடை செய்ததன் எதிர் விளைவாக இப்போது போர் நிறுத்தக் கண்காணிப்பு குழு விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை தடை செய்திருப்பதால் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் கண்காணிப்பாளர்களாக செயற்பட முடியாது. அவர்களை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என விடுதலைப்புலிகள் தெரிவித்து விட்டனர்.

இதற்காக வழங்கியிருந்த கால அவகாசத்தைக் கூட விடுதலைப் புலிகள் நெகிழ்வுத் தன்மையுடன் நீடித்து எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை வழங்கியுள்ளனர்.

இக்கால கட்டத்துக்குள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் நீக்கப்பட்டு ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும். அது நோர்வே நாட்டவராக இருக்கலாம், அல்லது வேறு நாட்டவராக இருந்தாலும் அந்த நாடு நடுநிலைமை தவறக் கூடாது.

ஆனால், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் சிறிலங்கா அரச கூற்று முரண்பாடாக இருக்கின்றது. கண்காணிப்பாளர்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை என சிறிலங்கா அரச தரப்புப் பிரதிநிதிகள் கூறிவருகின்றது.

இந்நிலையில் நோர்வே அனுசரணையாளர்கள் சரியாக சிந்தித்துச் செயற்பட வேண்டும். சிறிலங்கா அரசின் அர்த்தமற்ற பேச்சுக்களுக்கு இரையாகாமல் சரியான நடவடிக்கைகளை முறையாக பேண வேண்டும். இந்த அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் நீக்க ப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவில் புதிய பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டால் மாத்திரம் தீர்வு காணமுடியாது. இன்றுள்ள நெருக்கடி நிலையில் அடுத்த கட்ட பாய்ச்சல் எவ்வாறுள்ளதோ அதனடிப்படையில் தான் யுத்தமோ பேச்சுவார்த்தையோ தீர்மானிக்கப்படும்.

ஏனெனில் போர் நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்துவதற்கான முதல் சுற்று பேச்சுக்கள் ஜெனீவாவில் நடைபெற்று அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படாத நிலையில் மோசமானதொரு சூழ்நிலை காணப்படுகின்றது. ஒட்டுக்குழுக்களின் ஆயுதக்களைவு விவகாரத்துக்கு சிறிலங்கா அரசு சரியான தீர்வு காணத் தவறியதன் எதிரொலிதான் இன்று போர் நிறுத்த உடன்படிக்கை மிக மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது.

மீளவும் இருதரப்பும் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என சர்வதேச சமூகம் விரும்புகின்றது. மீண்டும் இரு தரப்புக்களிடையேயும் யுத்தம் ஒன்று முழுஅளவில் வெடிக்கக் கூடாது எனவும் சர்வதேச நாடுகள் கருதுகின்றன. சர்வதேச நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தரப்பி லிருந்து இந்த கருத்துத்தான் வெளிவந்துள்ளன. வருகின்றன.

ஆனால், சிறிலங்கா அரசு போர்ச் சூழலை தீவிரப்படுத்திக் கொண்டு சர்வதேச நாடுகளிடம் பகிரங்கமாக இராணுவ உதவிகளை பெற்றுக் கொள்வதில் தீவிர கரிசனை காட்டி வருகின்றது.

படை அதிகாரிகள் தொடக்கம் அமைச்சர்கள், அதிகாரிகள் என பல மட்டங்களிலும் வெளிநாடுகளுக்குச் சென்று ஆயுதங்களைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தான் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக சர்வதேச மட்டத்திலிருந்து எந்தக் கண்டனமோ அல்லது கருத்துக்களோ வெளிவரவில்லை.

எனவே எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதிக்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் நீக்கப்பட்டு புதிய பிரதிநிதிகள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட வேண்டியது பிரதான விடயம்

அதற்கடுத்ததாக போர் நிறுத்த அமுலாக்கம் தொடர்பான பேச்சுக்களை ஆரம்பிப்பதற்காக நெகிழ்வுத் தன்மையுடன் சிறிலங்கா அரசு செயற்படுமா? என்பது இரண்டாவது பிரச்சினை. இதற்கு நோர்வே அல்லது சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் நகர்வுகள் என்ன என்பதை பொறுத்தே அடுத்தது போரா? அல்லது பேச்சு வார்த்தையா? என்பதன் தலைவிதி தீர்மானிக்கப்படும்.

நன்றி:மட்டு.ஈழநாதம்

‘நார்வே’யை வெளியேற்ற ராஜபக்ஷே திட்டம்!

இழுத்த இழுப்புக்கு இந்தியாவருமா?

தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற கதை யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... நிச்சயம் சிங்கள பேரினவாத அரசுக்குப் பொருந்தும்! இல்லையென்றால், ‘‘நானும் இலங்கைக்காரன். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் இலங்கைக்காரர். ஆகவே, நாங்கள் இருவரும் எங்களுடைய பிரச்னையைப் பேசித் தீர்க்கவேண்டும். பிரபாகரனுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருக்கிறேன்’’ என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜ பக்ஷே அறிவித்திருப்பாரா?

இதுவே ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டிருந்தால்... இவ்வளவு உயிரிழப்புகள், யுத்த கொடூரங்கள் நிகழ்ந்திருக்குமா என வெறுத்துப்போய் சொல்லும் ஈழத் தமிழர்கள், ராஜ பக்ஷேவின் இந்த அறிவிப்பை கொஞ்சமும் நம்பத் தயாராக இல்லை என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது.

இப்படித்தான் கடந்த வாரம், ‘சிங்களமும் தமிழும் சமத்தன்மையுள்ள ஆட்சி மொழிகளாக ஆக்க பரிசீலிக்கப்படும்’ என்று இலங்கை அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இதையும் ஒருவிதமான அருவருப்பான சலுகையாகவே தமிழ் மக்கள் பார்க்கிறார்கள். காரணம், 1948&ல் ஆங்கிலேயர்கள் இலங்கையை விட்டு வெளியேறியபோது, சிங்களர்கள் ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் அவசரஅவசரமாகக் கைவைத்தது, இந்திய வம்சாவழித் தமிழர்களின் குடியுரிமையில்தான்! அதோடு, சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்றும், பௌத்தமே அரசு சமயம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுதான் ஈழத் தமிழர்களைப் போராட்ட களத்தில் குதிக்கவைத்தது. அதாவது, இப்போது எதையெல்லாம் ஈழத் தமிழர்களுக்கு சிங்கள அரசு தருவதாக சொல்கிறதோ, அதெல்லாம் மறுக்கப்பட்டதால்தான் இத்தனை ஆண்டுகள் இலங்கை ரணகளமாக இருக்கிறது!

இன்று பிரபாகரனும் சரி, ஈழத்தமிழ் மக்களும் சரி... விரும்பினால்கூட ஒரு இலங்கைக்காரனாக வாழமுடியாது என்பதே இன்றைய தேதியில் எதார்த்தமான ஒன்றாக இருக்கிறது. அந்த அளவுக்குத் தமிழ் மற்றும் சிங்கள இனங்கள் இடையே அங்கே பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது.

இதைப்பற்றி கொழும்புவில் வசிக்கும் மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர், Ô‘தமிழ் மக்களுக்கும் சம அந்தஸ்து கொடுங்கள் என்று 1950&களில் அமைதிவழிப் போராட்டம் மூலம் தந்தை செல்வா சொன்னபோது, அதை ஏளனப்படுத்திய சிங்களப் பேரினவாதம், இப்போது அடிமேல் அடிவாங்கிய பிறகு சமாதானத் தூது விடுகிறது போராளிகளுக்கு.

இன்றும் முப்பதாண்டுகளைத் தொட்டுவிட்ட ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டம் அதன் முக்கியமான வரலாற்றுக் காலகட்டத்தை எட்டியுள்ளது. பாலஸ்தீனம், அயர்லாந்து, கிழக்கு திமோர் பிரச்னைகளைப்போல ஈழப் போராட்டம் இன்று சர்வதேச அளவில் விவாதிக்கப்படுகிற ஒரு இன விடுதலைப் போராட்டமாகிவிட்டது. காரணம், ஐரோப்பிய நாடுகள் நார்வேயின் தலைமையில் ஈழத்தில் அமைதிக்காகத் தலையிட்டதுதான்.

இப்போது அதிபராக இருக்கும் மகிந்த ராஜபக்ஷே, ஆரம்பத்தில் ‘ஒற்றையாட்சி முறைக்குள்ளேயே தீர்வு’ என்றுதான் ஆட்சிக்கே வந்தார். வந்தவுடன் அவர் சரத்பொன் சேகாவை ராணுவத் தளபதியாக்கினார். கடந்த காலங்களில் தமிழ்மக்களின் மீதான இன வெறித்தாக்குதலுக்கு சேகாவும் ஒரு காரணம் என்று ஒரு குற்றச்சாட்டு ஏற்கெனவே உண்டு (இப்போது பொன்சேகா கொழும்பில் நடைபெற்ற தாக்குதலில் படுகாயமுற்று செயல்பட முடியாத நிலையில், சிங்கப்பூரில் மருத்துவம் பெற்றுக் கொண்டிருக்கிறார்).

இந்நிலையில், சிங்கள அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் நிலவிய சுமார் நான்காண்டு கால சமாதானம், இலங்கை அரசின் பிடிவாதத்தால் மீண்டும் நீர்த்துப்போக ஆரம்பித்தது. இதனால், சமாதானம் மீறப்பட்ட கடந்த சில மாதங்களில் மட்டும் காணாமல் போனோர், கொலை செய்யப்பட்டோர், பாலியல் வன்முறைக்குள்ளானோர் என்று ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடும். சில இடங்களில் தமிழ் மக்களின் மீதான ராணுவத் தாக்குதலுக்குப் பதிலடியாக அப்பாவி சிங்கள மக்களும் கொல்லப்படுகிறார்கள்.

இந்நிலையில், இலங்கை பிரச்னையில்மீண்டும் தன் கவனத்தைக் கொஞ்சம் அதிகமாகக்காட்டத் தொடங்கியிருக்கிறது இந்தியா. அதன்பிரதிநிதியாக ஷியாம்சரண், இலங்கைப் பிரதமரை சந்தித்திருக்கிறார். இந்தியாவின் இந்த அக்கறைக்குத் தூண்டுதலே சிங்கள அரசாங்கம்தான் என அரசியல் பார்வையாளர்களிடையே பேச்சு அடிபடுகிறது என்கிறார்அந்தப்பத்திரிகையாளர்.

தொடர்ந்து பேசியவர், ‘‘சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நார்வே அரசாங்கத்தை எப்படியாவது வெளியேற்றி விட வேண்டும் என்பதுதான் இலங்கை அரசின் ஆசை. சிங்கள தீவிரவாத கட்சியான ஜே.வி.பி&யின் விருப்பமும் இதுதான். நார்வேயை வெளியேற்ற வேண்டுமானால், இந்தியாவை கொல்லைப்புறம் வழியாக இதில் இழுத்துவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதுதான் இலங்கை அரசின் தற்போதைய நோக்கம். அதனால்தான் எடுத்ததற்கெல்லாம் புதுடெல்லிக்கு ஓடுகிறார்கள்.

நார்வே நாட்டின் சமாதான தூதுவர்கள் இலங்கையில் இருக்கும்வரை தமிழர்களுக்கு எதிராகப் பெரியதொரு தாக்குதலைத் தொடுக்க முடியாது என நினைக்கிறது இலங்கை அரசு. அதனால், அவர்களை எப்படியாவது வெளியேற்றத்தான், இந்தியாவை மத்தியஸ்தராக அது அழைக்கிறது. உண்மையில் பிரச்னைகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளும் எண்ணம் இலங்கை அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சொல்லப்போனால், முன்பு ராஜீவ் காந்தி உதவியுடன் தமிழர்களின் மீது ஜெயவர்த்தனே தாக்குதல் நடத்திய அதே உத்தியைத்தான் இப்போதும் கடைபிடிக்கப் பார்க்கிறது இலங்கை. தான் இழுத்த இழுப்புக்கு இந்தியா வந்துவிட்டால், அதன்பிறகு, தந்திரமாக இந்தியாவையும் வெளியேற்றிவிட்டு, திரிகோணமலையில் ராணுவத் தளம் அமைக்க விரும்பும் அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு தமிழர்களை நசுக்கிவிடலாம் என்பதுதான் ராஜ பக்ஷேவின் திட்டம்’’ என்கிறார், இலங்கை இனப் பிரச்னையை அதன் தோற்றத்திலிருந்தே நுணுக்கமாகக் கவனித்துவரும் அந்த மூத்த பத்திரிகையாளர்.

இந்நிலையில், Ôஇந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலமையிலான மத்திய அரசு, இலங்கைப் பிரச்னையில் நேர்மையான அணுகுமுறையைக் கடைபிடிக்கவேண்டும்Õ என்பதுதான் தமிழர்களின் விருப்பம். இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் தேசிய இனங்கள் இணைந்து வாழ்வதென்பது, இனி சாத்தியமில்லாத விஷயம். தமிழர்களின் தன்னாட்சித் திட்டத்தை செயல்படுத்த இந்தியா உதவ வேண்டும் என்பதே அங்குள்ள தமிழர்களின் ஆசை. அதேசமயம் புலிகளைப் புறக்கணித்துவிட்டு இத்தகைய பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் பிரயோஜனம் ஒன்றும் இல்லை. ஏனென்றால், இன்று புலிகள் மட்டும்தான் ஈழத்தமிழ் மக்களிடம் ஆதரவு பெற்ற ஒரே அமைப்பாக இருக்கிறார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.

லத்தீன் அமெரிக்க புரட்சியாளன் சேகுவேரா சொன்னான்: ‘நாம் எதார்த்தமானவர்கள். அதனால் அசாத்தியங்களை கனவு காண்கிறோம்!’

இதுதான் புலிகளின் நிலையும்கூட. ஏனென்றால், ஈழத்தில் ஒரு தனி அரசையே அவர்கள் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!

நன்றி: விகடன்

Sunday, July 09, 2006

மரத்தால் விழுந்தவனை…

தமிழகம் மண்டபம் அகதி முகாமில் தங்கியுள்ள ஈழத்தமிழ் மக்கள் மீது மண்டபம் அகதி முகாம் பாதுகாப்பு அதிகாரிகள் படுமோசமாக தாக்குதல் நடத்தியமை கண்டனத்துக்கும் கவலைக்குரியது. சிங்கள இராணுவத்தின் அட்டூழியம் தாங்காது இடம்பெயர்ந்த மக்கள் மனிதாபிமான ரீதியில் நடத்தப்படவேண்டியது அவசியமானது.

ஆனால், மிக மோசமாக தாக்கப்பட்டு அவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்றால் அவர்கள் தமிழகம் சென்றிருக்கத் தேவையில்லை. அவர்கள் வடக்குக் கிழக்கில் இருந்திருக்கலாம்.

இங்கு சிங்கள இராணுவத்தினர் அதே அட்டூழியத்தை புரிந்திருப்பார்கள். போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் போர் நிறுத்தத்தை முழுமையாக அமுல்படுத்தாத சிறிலங்கா அரசு போரைத் தீவிரப்படுத்தியுள்ளது.

பிரகடனப்படுத்தப்படாத ஒரு போருக்கு மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர். தினமும் இராணுவத்தினரின் வன்முறைகள் அதிகரித்து செல்கின்றன. இந்தியா இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டும்; தமிழ் மக்களின் நியாயப் பூர்வ கோரிக்கைகளை அங்கீகரித்து அதற்கான தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். இது இந்தியாவின் தார்மீக கடமை. இதில் நின்று இந்தியா வழுவி விடக் கூடாது என்பது ஈழத் தமிழ் மக்களின் பிரதான எதிர் பார்ப்பாகவும் உள்ளது.

ஆனால், இந்திய மத்திய அரசு இலங்கை விவகாரத்தில் ஒரு போதும் தலையிடமாட்டோம் எனத் தெரிவித்துக் கொண்டு சிறிலங்கா அரசுக்கு இரண்டு ராடர் கருவிகளை வழங்கியுள்ளமை ஈழத் தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

மறுபுறம் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் தகுந்த முறையில் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைத்ததை தொடர்ந்து ஈழத் தமிழ் மக்கள் விடயத்தில் தமிழக அரசு ஒரு நடுநிலையான அணுகுமுறைகளை கைக்கொள்ளும் என எதிர்பாhக்கப்பட்ட போதும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி காத்திரமான நடவடிக்கையினை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தினமும் சிறிலங்கா இராணுவ வன்முறைகளால் அச்சமடைந்த மக்கள் தமிழகத்துக்கு அகதிகளாகச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் தமிழகம் சென்றடையும் நிலையில் இலங்கை விவகாரம் குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசனைகளை தமிழக அரசு மேற்கொண்டு சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து படுகொலைகளை கட்டுப்படுத்துகின்ற ஒரு சூழலை உருவாக்கமுடியும்.

ஆனால், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் எதிர்பார்க்கப்பட்ட சூழலை உருவாக்கவில்லை.

மத்திய அரசின் நிலைப்பாடு தான் எனது நிலைப்பாடு என அண்மையில் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார். அவ்வாறெனில் ராடர் கருவிகள் கொடுத்தலை கலைஞரும் அங்கீகரிப்பதாகவே அர்த்தப்படுகின்றது.

தற்போது தமிழகத்திலுள்ள கட்சிகள் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணிகளை நடத்தி வரும் நிலையில் ஆட்சியிலிருக்கும் பிரதான கட்சியான தி.மு.க. மௌனம் காப்பது அல்லது மத்திய அரசின் முடிவு தான் எம் முடிவு எனக் கூறுவது பொருத்தமற்றது.

இந்த நிலையில் இதர கட்சிகளுடன் இணைந்து ஈழத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். அதே சமயம் தற்போது மண்டப முகாமிலுள்ள அகதிகள் தாக்குதலுக்குள்ளானது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாவண்ணம் அங்கு தங்கியிருக்கும் மக்களின் நலன்கள் பேணப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிடின் மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாகி விடும். அந்த நிலைமைக்கு இந்தியாவின் நடவடிக்கைகள் சென்று விடக்கூடாது என்பதே ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.

நன்றி: மட்டு.ஈழநாதம்

அங்கே கருணா இங்கே?

அனுராதபுரம் கண்ணிவெடி சம்பவத்தை காரணங்கூறி திரிகோணமலை, மன்னார் பகுதிகளில் ஈழத் தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு முப்படைத் தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது.

இதனால் 40,000 ஈழத் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 3,000 பேர் தமிழகத்தில் தஞ்சம் புகுந்து உள்ளனர்.

இந்நிலையில், ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் தமிழர் அமைப்புகள் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

அன்றும், இன்றும், என்றும் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பேன் என்று நெஞ்சை நிமிர்த்தி சிங்கமென கர்ஜிக்கிற நமது பொதுச் செயலாளர் வைகோ மதுரை மாநகரில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு போர் முழக்கமிட்டார்.

சிங்கள இனவெறி அரசுக்கு இந்தியா கள்ளத்தனமாக ஆயுதம் வழங்குவதை அம்பலப்படுத்தினார்.

அவர்கள் தரட்டும்; ஆயுதம் கைமாறும். புலிகள் பறித்தெடுப்பார்கள்.

இச்சூழலில், “சில அரசியல் காரணங்களுக்காக ஈழத் தமிழர் ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பா.ம.க. பங்கேற்காது” என்று இராமதாசு அறிக்கை விட்டுவிட்டார்.

அது என்ன? சில அரசியல் காரணங்கள்!

பதவி சுகத்தை அனுபவிப்பதில் சிக்கல் வந்துவிடும் என்கிற அச்சமா?

“மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஆக்கப்பூர்வமான முயற்சிகள் பா.ம.க.வால் எடுக்கப்படுகின்றன.” - இராமதாசு

ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை இல்லை என்கிற ஞானோதயம் எப்போது இவர்களுக்கு வந்தது?

எல்லாம் பதவி படுத்தும் பாடு!

இவர் இப்படி என்றால், தமிழ் இனத்தலைவர் (?) கருணாநிதி “இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசின் நிலையை ஒட்டியே தமிழக அரசின் நிலைப்பாடு இருக்கும் என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்கிறார்.

மகள் வீட்டிற்கு பெங்களூருக்குச் சென்ற இடத்தில் இருந்து வசன கவிதை ஒன்றை எழுதி இருந்தார்.

“ஓய்வெடுக்க என்றுதான் இங்கு வந்தேன்

வாய்வலிக்க அழவேண்டும் போல் இருக்கிறது

ஓடி வந்தேன் சென்னைக்கு உற்ற தோழமைக் கட்சிகளுடன்

ஒன்றுகூடி யோசிக்கலாம் என்பதற்கே - என்பதாக.

திட்டமிட்டபடி பெங்களூரில் இருந்து விட்டு சென்னை திரும்பிய பின்,

ஃ தோழமைக் கட்சிகளைக் கூட்டி இரண்டு தீர்மானங்கள் போட்டார்.

ஃ இரண்டு அமைச்சர்களை அகதிகள் முகாம்களுக்கு அனுப்பி அறிக்கை தரச் செய்தார்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

செய்தியாளர் : நார்வே நாட்டைப்போலவே இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சு நடத்துமா?

கருணாநிதி : டெல்லி முகவரி (சிரிப்பு) எந்த முறையில் அவர்களால் அணுக முடியுமோ அந்த முறையில் அணுகுவார்கள்.

செய்தியாளர் : தாங்கள் இன்றைய தினம் எழுதியுள்ள தீர்மானத்தில் மிகவும் கவனமாக கோரிக்கை வைத்து இருப்பது போல் தெரிகிறதே?

கருணாநிதி : நன்றி (சிரிப்பு)

பெங்களூரில் வாய்வலிக்க அழவேண்டும் போல் இருக்கிறது என்றவர் சென்னைக்கு திரும்பியதும் சிரிக்கிறார்.

அப்படி என்ன சிரிக்கும்படியான அம்சம் நிருபர்களின் கேள்விகளில் இருக்கிறது.

கருணாநிதியின் பதிலில் சாமார்த்தியமான நடிப்புதான் தெரிகிறது.
அழுகை - சிரிப்பு - நடிப்பு, இவர்தான் கருணாநிதி.


கேள்வி : இந்தியாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று இலங்கைக்குச் சென்று நிலைமைகளை விசாரித்து அறிய வேண்டும் என்ற கோரிக்கை ஒன்று வைக்கப்படுகிறதே?

கருணாநிதி : கோரிக்கை வைப்பவர்கள்தான் அதைப் பற்றி விளக்க வேண்டும். பிரதமரும், மத்திய அரசும் என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செயல்களை ஆற்றவேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டு இருக்கிறோம். அதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு எதுவும் நான் இப்போது யோசனை சொல்லவில்லை.

கோரிக்கை வைப்பவர்கள்தான் அதுபற்றி விளக்க வேண்டும்; மிகச் சரிதான். ஆனால், ‘நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்ப வேண்டும் நிலைமையைக் கண்டு அறிய' என்பதில் கருணாநிதிக்கு புரியாமல் போனது எது?

கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமாம்!

பொழிப்புரை - பதவுரை - அரும்பதவுரை - விளக்கவுரை எல்லாம் தேவையாம் முத்தமிழ் அறிஞருக்கு, நன்றாகவே நடிக்கிறார்!


கேள்வி : இந்தப் பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவீர்களா?

கருணாநிதி : இன்று நடந்தது அனைத்துக் கட்சிகளின் கூட்டம்தான். இன்றைய கூட்டத்தின் முதற்கட்டமாக ஏழு கட்சித் தலைவர்கள் கூடிப் பேசி கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்ததாம் ஈழத் தமிழருக்காக. . . கருணாநிதி சொல்கிறார்.

‘நெஞ்சாரப் பொய் சொல்ல வேண்டாம்! என்பதெல்லாம் கருணாநிதிக்காகவே கூறிய வார்த்தைகள் தானோ?

‘சண்டையிடுகிறவனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பவன் நல்ல சேவை செய்கிறான்' - என்று சொல்கிறார்கள்

கருணாநிதியைப் பொறுத்தவரை ஈழத் தமிழர்களுக்காக வாயைத் திறக்காமல் இருந்தாலே போதுமானது.

அகதிகள் முகாம்களுக்கு இரண்டு அமைச்சர்களை அனுப்பி வைத்து அறிக்கை பெறுவதை அரைப்பக்க அளவிற்கு போட்டோ எடுத்து மு.ஒலியில் போட்டதோடு சரி.

அறிக்கையின் விவரம் என்ன?

முகாம்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

2005 ஆம் ஆண்டின் நடுவில் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சதிகள் செய்ய பரந்தன் ராசன் இலங்கை இனவாத அரசால் அனுப்பி வைக்கப்பட்டார்.

பரந்தன் ராசன் குழுவினரின் நடவடிக்கைகளை அறிந்த அப்போதைய அ.தி.மு.க. அரசு கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தது. இவர்களை விடுவிக்க டில்லியிலிருந்து ‘ரா' உளவுத்துறை அதிகாரிகள் விரைந்து தமிழகம் வந்தனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க முயற்சித்தனர். அவர்களது முயற்சி வெற்றி பெறவில்லை. பின்னர் இந்தியாவில் அடி எடுத்து வைக்கமாட்டோம் என்று பரந்தன் குழுவினர் எழுத்து மூலமாக உறுதிமொழி கொடுத்தபின் இலங்கை அனுப்பி வைக்கப்பட்டனர்.

இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் பரந்தன் ராசன் குழுவினர் இந்திய திரும்பி பெங்களூரில் தங்கி பகிரங்கமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
தமிழ் நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களுக்குச் சென்று இளைஞர்களிடம் இச்சகம் பேசி சிங்கள இராணுவ துணைப் படையில் சேர்ந்தால் ரூ.10,000 ஊதியம், வேறு பல சலுகைகள் எனக்கூறி கொழும்புவிற்கு அழைத்துச்சென்று அங்கு இராணுவப் பயிற்சி அளித்து இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் பகுதிகளுக்கு அனுப்பி தமிழ் இளைஞர்களைக் கொண்டே தமிழர்களை அழிக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர்.


அகதிகள் முகாம்களில் ஆள்பிடிக்கும் வேலையைத் தடுத்தி நிறுத்த தமிழ் இனத் தலைவரின் ஆட்சி என்ன செய்யப் போகிறது?

இதன்பின், பிரதமரால் அனுப்பி வைக்கப்பட்ட எம்.கே.நாராயணன் கருணாநிதியை சந்திக்கிறார்.

யார் இந்த எம்.கே. நாராயணன்?

ராஜீவ் காந்தி கொலையுண்டதற்குப் பின், அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறை இருந்ததா என்பதைக் கண்டறிய நீதிபதி ஜே.எ°.வர்மா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.

1991 ஆம் ஆண்டு டிசம்பரில் வர்மா கமிஷன் அளித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது.

அப்போது உள்துறை அமைச்சராக இருந்த எ°.பி.சவான் அறிக்கையின் பரிந்துரைகளை முற்றாக நிராகரித்தார்.

ஆனால், காங்கிர° கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தலின் காரணமாக பிரதமர் நரசிம்மராவ் அறிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டார்.

எனினும் அறிக்கை இரண்டாண்டு காலம் கிடப்பில் போடப்பட்டது.

அதன்பின் எ°.பி.சவான், அர்ஜூன் சிங், வி.சி.சுக்லா, ஜகதீஷ் டைட்லர், எச்.ஆர்.பரத்வாஜ், சதீஷ்சர்மா ஆகிய அமைச்சர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழு வர்மா கமிஷன் அறிக்கையை ஆய்வு செய்து சில மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது.

அந்த மூத்த அதிகாரிகள், 1. முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் வினோத் பாண்டே 2. உளவுத் துறைத் தலைவர் எம்.கே.நாராயணன், 3. உள்துறைச் செயலாளர் சிரோன் மணி சர்மா 4. பாதுகாப்புச் செயலாளர் ஜி.எ°.வாஜ்பாய் ஆகியோர் ஆவார்கள்.

இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால் 1996 ஆம் ஆண்டு நான்கு அதிகாரிகளிடமும் விளக்கம் கேட்கப்பட்டது. எப்போது? நால்வரும் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகுதான்.

பதவியில் இருக்கும்போதே விளக்கம் கேட்க வேண்டும் என்பது பிரதமர் அலுவலகத்துக்குத் தெரியாத ஒன்று அல்ல.

பிரச்சினையை ஒன்றுமில்லாமல் செய்வதற்காக ஒப்புக்காக விளக்கம் கேட்கப்பட்டது.

உடனடியாக அந்த நாலுபேரும் மத்திய நிர்வாக மன்றத்திற்கு மேல் முறையீடு செய்தனர்.

ஓய்வு பெற்ற பின் விளக்கம் கேட்டது முறையற்றது என்று மத்திய நிர்வாக மன்றம் எதிர்பார்த்தபடியே ஆணை பிறப்பித்தது. அதிகாரிகள் திட்டமிட்டு பாதுகாக்கப்பட்டனர்.

பாதுகாக்கப்பட்டது ஏன்? பின்னிருந்து இயக்கிய சூத்ரதாரிகள் யார்? என்பதெல்லாம் விடைகாண முடியாத கேள்விகள்.

குற்றம் சாட்டப்பட்ட நால்வரில் ஒருவரான எம்.கே.நாராயணன்தான் தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார்.

இவர் தான் இப்போது கருணாநிதியை சந்திக்க இருக்கிறார்.

மாண்புமிகு பிரதமர் மன்மோகன்சிங் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்கிறார்.

ஆனால், சிங்க இனவாத அரசுப் பிரதிநிதிகளோடு மட்டுமே இதுவரை பேச்சுவார்த்தை நடக்கிறது.

ஈழத்தமிழர் பிரதிநிதிகளோடு பேசாதது ஏன்?

பேச்சுவார்த்தை என்பது ஒரு வழிப்பாதையா?

இப்போது இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுச் செயலர் ஷியாமசரண் சந்தித்துப் பேசி இருக்கிறார்.

ஈழத் தமிழர்களின் வாழ்வு உரிமையும், தமிழ் ஈழத்தின் விடிவும், இந்த ஆளும் கும்பல்களின் - தரகர்களின் கையில் இல்லை.

ஈழத் தமிழருக்கு வருந்துவதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் கருணாநிதி.

அங்கே கருணா! இங்கே கருணாநிதி!!

நன்றி: சங்கொலி

Monday, July 03, 2006

திருகோணமலையில் கிளேமோர் தாக்குதல். ஐவர் பலி

திருகோணமலை அனுராதபுரம் சந்தியில் இன்று நண்பகல் நடைபெற்ற கிளேமோர்த் தாக்குதலில் நான்கு படையினர் உட்பட ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். பதினான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வாகனமொன்றில் பொருத்தப்பட்டு தொலைஇயக்கி மூலம் இக்கிளேமோர்க்குண்டு வெடிக்கவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் காவலரண் ஒன்றிற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த குறித்த முச்சக்கரவண்டியை படைவீரர்களின் குழுவொன்று சோதனையிட முற்பட்டபோதே தாக்குதல் நிகழ்ந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இத்தாக்குதலில் இரு பொலிஸார், சிப்பாய், ஊர்காவற்படைவீரர் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர். காயமடைந்த பதினான்கு பேரில் கவலைக்கிடமான நிலையில் இருந்த மூவர் கண்டி, கொழும்பு வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

Sunday, July 02, 2006

பாலா' சொல்ல முற்பட்டது என்ன?

-கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்-


* இந்தியத் தொலைக்காட்சிப் பேட்டி ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்....

நாட்டில் சொல்லிக் கொள்ளத்தக்க நம்பிக்கையூட்டும் அபிவிருத்திகள் எதுவும் ஏற்பட்டிராதபோதும் அரசியலும் அதைச் சுற்றியுள்ள ஏனைய மூலக்கூறுகளும் விரைவாகவே நகரத் தொடங்கியுள்ளன. அதன் காரணமாக இந்த நாடகத்தின் காட்சிகள் வேகமாக மாறத் தொடங்கியுள்ளன. ஒரு காட்சியின் முக்கியத்துவம் மனதில் பதியுமுன் மறுகாட்சி வந்து போவதால் எல்லாம் மறைக்கப்பட்டு விடலாம். உடனடி நிலையில் மாபெரும் காட்சிபோல் தோற்றமளித்த பாரமி குலதுங்கவின் மரணம் கூட ஒரு வாரத்திற்கு மேல் நினைவிலிருக்குமா என்பது சந்தேகமே. இந்த வேகம் எங்கு போய் நிற்குமோ என்பது சுவாரஸியமானது மட்டுமல்ல இச்சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியதாகவும் இருக்கும்.

கண்காணிப்புக் குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நோர்வே கூட்டத்தின் முக்கியத்துவத்தை இரண்டாந்தரத்திற்குத் தள்ளிவிட்டு பாலசிங்கத்தின் ராஜீவ் காந்தி கொலை பற்றிய நேர்காணல் ஊடகத் தலைப்புகளை தனதாக்கிக் கொண்டுள்ளது. இது மிக முக்கியத்துவமுடைய ஒரு `பிரச்சினை' என்பதால் பத்திரிகைத் தலைப்புகள் வேறு பிரச்சினைக்கு தாவுவதற்கு முன்னர் அதுபற்றி சற்றே நோக்குவது பொருத்தமானதாயிருக்கும்.

கடந்த வாரம் இந்தியத் தனியார் தொலைக்காட்சிசேவை ஒன்றிற்கு செவ்வி ஒன்றை வழங்கிய அன்டன் பாலசிங்கம், ராஜீவ் காந்தியின் கொலைக்கு மன்னிப்புக் கோரியிருப்பதாக சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இச்செய்திகளின்படி புலிகள் கொலையைத் தாமே செய்ததாக பொறுப்பேற்றிருப்பதுடன் அதற்காக மன்னிப்பும் கோரியிருப்பதாகவும் கூறப்பட்டது. அதேசமயம், இது பற்றிக் கருத்துக்கூறிய ஊடகங்களும் ஆய்வாளர் பலரும் பேட்டியையோ அல்லது அது பற்றிய முழுமையான அறிக்கையையோ பாராது தலையங்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது.

ஏனெனில் பாலசிங்கத்தின் கருத்துகள் சரியான வகையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இத்தகைய பின்னணியில் தற்போது பாலசிங்கத்தின் பேட்டியில் கொலை புலிகளால் செய்யப்பட்டது என ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளதாக இந்து செய்தி வெளியிட்டுள்ளது. இது பாலசிங்கத்தின் பேட்டி தொடர்பில் மேலதிக சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதுடன் பேட்டியை முழுமையாக நோக்க வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாலசிங்கத்தின் இச்செவ்வி பற்றிய முழுமையான அறிக்கை ஒன்று தமிழ்நெட் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இவ்வறிக்கையில் இருந்து புலப்படுவது என்னவெனில் செவ்வியில் நான்கு முக்கியமான விடயங்கள் கூறப்பட்டிருந்தன என்பதாகும். அவையாவன:
(1) காந்தியின் கொலை தொடர்பில் புலிகள் வருந்துகின்றனர். (2) எச்சந்தர்ப்பத்திலும் இந்தியாவின் நலன்களுக்கு எதிரான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்ற உத்தரவாதம், (3) சமாதான செயன்முறையிலான இந்தியாவின் மேலதிக தலையீட்டுக்கான கோரிக்கை, (4)இந்திய சமஷ்டியை ஏற்றுக்கொள்வதற்கான விருப்பம்.

இந்நான்கு விடயங்களையும் தனித்தனியாக நோக்குவதற்கு முன், தற்போது ஏற்பட்டுள்ள புலிகள் கொலையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனரா இல்லையா என்ற சர்ச்சையை நோக்குவது பொருத்தமானது. பாலசிங்கம் தனது செவ்வியில் ராஜீவ் காந்தியின் கொலையை நாமே செய்தோம் அல்லது புலிகளே செய்தனர் என்று எந்த இடத்திலும் கூறியிருக்கவில்லை. எனவே, தயா மாஸ்டர் கூறுவது போன்று கொலைக்கான பொறுப்பு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது சரியாக இருக்கலாம். இருப்பினும், பாலசிங்கம் இக்கால வரலாற்று நிகழ்வுகளை அடுக்கி வந்த விதமும், கொலை ஒரு மாபெரும் தவறு என்று கூறிய விதமும், அதன் பின்னர் அந்நிகழ்விற்காக தாம் வருந்துவதாகக் கூறிய விதமும் கொலையின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் தோற்றப்பாட்டினை ஏற்படுத்துகின்றது என்பதில் சந்தேகமில்லை.

பேட்டியின் இறுதியில் கொலையின் பொறுப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற முடிவிற்கு ஒருவர் வருவாராயின் அது பார்வையாளரின் தவறு எனக் கூறமுடியாது. எனவே, தாம் என்ன கூறிவருகின்றோம் என்பதை சரியாகவும் தெளிவாகவும் கூறவேண்டியது புலிகளின் பொறுப்பாகும்.

இனி மேற்கூறிய நான்கு விடயங்கள் பற்றி நோக்கலாம். முதலில் பாலசிங்கம் `மன்னிப்பு' என்ற வார்த்தையை உண்மையில் பயன்படுத்தியிருக்கவில்லை. மாறாக, `வருந்துகின்றோம்' என்ற பதமே பயன்படுத்தப்பட்டிருந்தது. அதேசமயம், ராஜீவ் காந்தியின் கொலை ஒரு `மாபெரும் வரலாற்று அவலம்' என்று கூறியுள்ளதன் மூலம் தனது கவலையை வெளிப்படுத்த பாலசிங்கம் முயற்சி செய்துள்ளார். இதை மட்டுமே வைத்துக் கொண்டு புலிகள் மன்னிப்புக் கோரியுள்ளனர் எனக் கூறுவது எவ்வளவு சரியானது என்பது நிச்சயமானதல்ல.

புலிகளின் `மன்னிப்பை' நிராகரித்துள்ள இந்திய அரசாங்க பேச்சாளர் ஒருவர் மன்னிப்பு பாரதூரமான ஒரு முறையில் முன்வைக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் கோபத்தை தணிப்பதற்காகக் கூறப்பட்ட இன்னுமோர் விடயம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இந்திய நலன்களுக்கு எதிராக புலிகள் இயக்கம் செயற்பட மாட்டாது என்ற உத்தரவாதம் ஆகும்.

முதலில் கூறப்பட்டுள்ள விடயத்துடன் ஒப்பிடுகையில் இந்திய நலன்களுக்கு எதிராக செயற்படுவதில்லை என்கின்ற உத்தரவாதம் கூடுதல் நம்பகத் தன்மை உடையதாக உள்ளது எனப்படலாம். ஏனெனில், அண்மைக் காலத்தில் புலிகளின் செயற்பாடுகள் எதுவும் இந்தியாவுக்கு எதிராக அமைந்திருந்தன எனக் கூறமுடியாது. அதேசமயம், இந்தியாவுடன் சுமுகமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. உதாரணமாக 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கிளிநொச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலும் இதேவிதமான உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்ததுடன் புதிய உறவுக்கான விருப்பமும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அச் சந்தர்ப்பத்தில் உத்தரவாதமும் வேண்டுகோளும் இந்தியாவால் நிராகரிக்கப்பட்டிருந்தது. இம்முறையும் அதேவிதமான ஒரு ஆரம்ப வெளிப்பாடே தென்படுகின்ற போதும் உண்மையான எதிர் நடத்தை எவ்விதம் இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டும்.

மூன்றாவதாக, இந்தியா சமாதான செயன்முறையில் முக்கியமான ஒரு பங்கை வகிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது உண்மையில் இந்தியா இப்பொழுது கடைப்பிடிக்கின்ற நேரடியாகத் தலையிடாதிருக்கின்ற கொள்கையை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றதொனியில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், இந்தியா தனது பங்கை அதிகரிக்க வேண்டும் என்று கூறப்பட்ட அதேசமயத்தில் புலிகளுடன் சிறந்ததொரு உறவு இல்லாது இந்தியா ஒரு மத்தியஸ்தராக செயற்பட முடியாது என்றும் பாலசிங்கம் கூறியுள்ளார். இதன் கருத்து இந்தியாவின் தலையீடு அதிகரிப்பதற்கு முன்னர் புலிகளுடனான உறவு சீர்படுத்தப்பட வேண்டும் என்பதாகும். அதேசமயம், புலிகளுக்கு எதிராக காணப்படுகின்ற தடை போன்றவற்றின் மத்தியில் உறவு சீர்செய்யப்படுவது சாத்தியமானது அன்று. எனவே, மத்தியஸ்தமும் சாத்தியமானதன்று. அதன் காரணமாகவே பாலசிங்கம் மோதல் தரப்பினர் மீது இந்தியா அரசியல் மற்றும் இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி இராணுவ ரீதியாக தலையிடக் கூடாது எனக் கோரி உள்ளார். உண்மையில் பாலசிங்கத்தின் செவ்வியின் அடிப்படை நோக்கமே இந்தியா எதிர்காலத்தில் இராணுவ ரீதியாக தலையிடக் கூடாது என வலியுறுத்துவதே எனவும் கருதப்படலாம்.

பாலசிங்கத்தின் செவ்வியில் போதுமான கவனத்தைப் பெறாத ஆனால் சமாதான முயற்சிகளுடன் தொடர்புபட்ட முக்கியமானதொரு விடயம் அவர் இந்திய சமஷ்டி பற்றிக் கூறியுள்ள கருத்து ஆகும். 1980 களில் முன்வைக்கப்பட்ட அதிகாரப் பகிர்வுத் திட்டம், அதாவது மாகாண சபை முறைமை, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதாய் அமைந்திருக்கவில்லை. ஆயினும் இந்திய சமஷ்டி போன்றதொரு திட்டம் முன்வைக்கப்பட்டிருக்குமாக இருப்பின் அதனைத் தாம் ஏற்றுக் கொண்டிருக்கலாம் என அவர் கூறியுள்ளார். இந்நிலைப்பாடு இன்றும் பொருந்துமா என்பது பற்றி எதுவும் தெளிவாகக் கூறப்படவில்லை. எனினும், இதனை அடிப்படையாகக் கொண்டு புலிகள் இந்திய சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றிற்கு தயாராக உள்ளனர் எனக் கூறப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அது ஆனந்தசங்கரியின் நிலைப்பாட்டிற்கும் புலிகளின் நிலைப்பாட்டிற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி விடலாம். எனினும் இந்திய முறைமை பூரணமான ஒரு சமஷ்டி அல்ல. அதிலும் ஒற்றையாட்சியில் பண்புகளே அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில் காணப்படுகின்ற அரசியல் யதார்த்தங்கள் காரணமாகவே அது ஒரு சமஷ்டி போன்று செயற்படுகின்றது என்பவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

இவற்றிற்குப் புறம்பாக பாலசிங்கத்தின் செவ்வி தொடர்பில் ஏற்படுகின்ற முக்கியமானதொரு கேள்வி, இவ்விடயங்கள் ஏன் தற்போது கூறப்பட்டுள்ளன என்பதாகும். ஏனெனில், அது ஒரு விசப்பரீட்சையே எனப்படலாம். குறிப்பாக தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு சார்பான ஒரு அபிப்பிராயம் ஏற்பட்டு வருகின்ற நிலையில் ராஜீவ்காந்தியின் கொலைக்கான பொறுப்பை நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ ஏற்றுக் கொள்வது அவ் ஆதரவு தளத்தை பலவீனப்படுத்தி விடக்கூடும். இனி சில அரசியல் தலைவர்கள் புலிகளை நேரடியாக ஆதரிக்க தயங்கக் கூடும். அத்துடன் இச் செய்தியின் காரணமாக மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு பெரிதும் மாறிவிடும் எனவும் எதிர்பார்ப்பதற்கில்லை.

எனவேதான், இச் செவ்வியின் உண்மையான நோக்கம். காந்தி கொலையின் பொறுப்பை ஏற்றுக் கொள்வதோ அல்லது அதற்கு வருத்தம் தெரிவிப்பதோ அல்ல, மாறாக இந்தியா இராணுவ ரீதியாக இலங்கையில் தலையிடக் கூடாது என்று கேட்டுக்கொள்வதே ஆகும் எனக் கருத வேண்டியுள்ளது.

இக் கோரிக்கை இந்த நேரத்தில் ஏன் முக்கியமானது? கடந்த தடவை புலிகள் யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்ட போது இந்தியாவின் இரகசிய தலையீட்டின் காரணமாகவே அது கைவிடப்பட்டதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியக்கூடியதாய் உள்ளது. எனவே, மீண்டுமொரு முறை இம் முயற்சி மேற்கொள்ளப்படுமாயின் அதற்கு தடையாக இந்தியா அமைந்துவிடக் கூடாது என்ற பாரிய ஒரு கரிசனை புலிகளிடையே காணப்படக் கூடும். அதனை உத்தரவாதப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே தற்போது புலிகள் திடீரென இச் செய்தியை வெளியிட்டுள்ளனர் எனவும் கருதப்படலாம். உண்மையில் இது புலிகளால் முன்னெடுக்கப்படக் கூடிய பாரிய ஒரு நடவடிக்கையின் ஆயத்த செயற்பாடாக இருக்கக் கூடும்.

Friday, June 30, 2006

"என் பிள்ளை பிறக்கிறபோதே அகதி!"

விர்ர்ர்ரென விரைந்து வருகிறது ஒரு படகு. கடலின் நடுவே சின்னச் சின்னதாக மணல் திட்டுக்கள். பொட்டலங்களைத் தூக்கியெறிவது போல, சிலரை அவசரகதியில் தள்ளிவிட்டுக் கண்ணிமைக்கும் நேரத்-தில் காணாமல் போகிறது படகு.

கரை மணலைப் பார்த்த புன்னகையும், சொந்த மண்ணைத் தொலைத்த கண்ணீருமாக இப்படி தினம்-தினம் கூட்டம் கூட்டமாக இந்தியக் கடலோரம் வந்து இறங்குகிறார்கள் ஈழத் தமிழர்கள்.

‘‘பிழைச்சு வந்துட்டம். இனி பயம் இல்லை. அழக் கூடாது. அம்மா இருக்கேன். அழாதேடா செல்லம்’’ என்று தேற்றுகிற தன் தாயின் மடியில் முகம் புதைத்து உடல் நடுங்கக் கதறுகிறாள் ஜனனி. ‘அப்பா... அப்பா...’ என்ற ஒரே வார்த்தை மட்டுமே திரும்பத் திரும்ப. மனைவியும் மகளும் மட்டும் பிழைத்-தால் போதுமென்று இருந்த பணத்தையெல்லாம் படகுக்காரனுக்குக் கொடுத்து அனுப்பிவைத்திருக்கிறார் அந்தப் பாசமிகு தந்தை.

பத்து மணி நேரத்துக்கும் மேலாக, மூச்சுத் திணறலோடு உயிரின் விளிம்பில் தத்தளிக்கிறது எட்டு மாதப் பிஞ்சு லச்சு. ‘உக்கிரமான கடல் காத்து வீசு அலை எங்களது போட்டில் விழுந்துடுச்சு. கடவுளே... சால கடல் நீர் இந்தப் பிள்ளையின் முகத்தில் அறைஞ்சிடுச்சு. என் பிள்ளைக்கு மருத்துவம் பார்க்க இயலுமா?’’ என்று கதறுகிற யோகேஸ்வரியுடன் கடற்படையினரிடம் மன்-றாடிக்கொண்டு இருக்கிறார் கணவர் யோகராசா.

‘‘படகு கவிழ்ந்து எல்லோரும் ஆளுக்கு ஒரு திசையில் நீந்திப் போனோம். என்னோட மூன்று மகள்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல், என் சின்ன மகனை மட்டும் முதுகில் சுமந்து நீந்திக்கொண்டே வந்தேன். இரவு நேரம். இருட்டைத் தவிர, எதுவும் தென்படவில்லை. மூர்ச்சையாகி மயங்கிய பிள்ளையைச் சுமக்க மாட்டாமல் தண்ணீரிலேயே விட்டுவிட்டு இருபதடி தூரம் நீந்தி வந்தால், காலில் கரை தட்டுப்பட்டது. ஐயோ... என் பிள்ளையை நானே கொன்றுவிட்டேன். என்னை எந்தக் கடவுளும் மன்னிக்க மாட்டார்’’ என்று கதறுகிறார், அகதிகள் முகாமில் இருக்கும் கந்தசாமி.

இலங்கைப் போரில் தூக்கி எறியப்பட்டுக் கூட்டம் கூட்டமாக, அகதிகளாக ராமேஸ்வரம் தீவில் அடைக்கலமாகிறார்கள் இலங்கைத் தமிழர்கள். மன்னார், பேசாலை பகுதிகளிலிருந்து புறப்படும்படகுகள் ஏக்கமும் துயரமும் சுமந்தபடி வந்துகொண்டே இருக்கின்றன.

18 கி.மீ. கடல் பயணத்தில், மரணத்தின் வாசல்வரை சென்று பிழைக்கிறார்கள் அகதிகள். ‘‘எங்கள் படகில் மொத்தம் 12 பெரியவர்கள், 5 குழந்தைகள். தலைக்-குப் 10 ஆயிரமும், சிறுசுகளுக்கு 8 ஆயிரமும் தந்து படகு ஏறினோம். நடுக் கடலில் வந்தபோது, படகின் ஓரத்தில் விரிசல் விழுந்ததாகச் சொல்லி படகை நிறுத்திவிட்டார்கள். ‘உயிர் பிழைக்கத்தானே படகு ஏறினோம். இப்படி நடுக் கடலில் அநாதைப் பிணமாக வேண்டியாதாகிப்போச்சே!’ என்று அழுதோம். எங்களது உடைமைகளையெல்லாம் தூக்கிக் கடலில் எறிந்தார்கள். பாரம் குறைஞ்சாதான் படகு பிழைக்குமாம். எங்களுக்கு மாற்று உடுப்புக்கூட எதுவும் இல்லை. பையில் வைத்திருந்த கொஞ்சநஞ்ச பணமும் கடலோடு போய்விட்டது. அகதியாக இறங்கியதுமே, மானம் மறைக்க உடுப்பு கேட்க வேண்டியாதாகிப்-போச்சு. இப்படிப் பிழைக்க வேண்டுமா என்று மனசுக்குள் ஒரு வலி உறுத்திக்கொண்டே இருக்கிறது’’ என்று மரண வாசலைக் கடந்து வந்த தன் துயர அனுபவத்தைச் சொல்கிறார் கோமஸ்.

தொண்டு நிறுவனம் தந்த ரொட்டித் துண்டை அமிர்தமாக எண்ணிச் சாப்பிடுகிறாள் நிஷாந்தினி. ஒரு நாள் பசியை ஈடுகட்டுகிற அவசரம் அவள் கண்களில்!

‘‘நல்ல இசை கேட்டால், குழந்தை நன்றாகப் பிறக்கும் என்றார் திரிகோணமலை டாக்டர். என் வயிற்றில் வளரும் பிள்ளைக்கு ‘ஷெல்’ அடிக்கும் சத்தம்தான் பரிச்சயம். நாங்கள் பிறந்து அகதியானோம். என் பிள்ளை பிறக்கிறபோதே அகதி. ஐயோ, ஏன் பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டேனோ?’’ என்று தன் வயிற்றுக்குள் வளரும் எட்டு மாத உயிரைத் தடவிக்கொண்டே கலங்குகிறார் செல்வி.

‘‘கடந்த வாரம் நாங்கள் போக இருந்த போட்டை நேவிக்காரர்கள் எரிச்சுப் போட்டாங்க. யாரும் அகதியாப் போகக் கூடாதுன்னு மிரட்டினாங்க. நாங்க போகத் திட்டமிட்டிருந்தது தெரிஞ்சிருந்தா, இந்நேரம் ஏதேனும் ஒரு புதைகுழியில் பிணமாகிப் புதைஞ்சிருப்போம்’’ என்கிறார் கிறிஸ்டியா.

‘‘கடல் வழியா தமிழ்நாடு வந்துட்டா, நாங்க பிழைச்சோம். இல்லையென்றால் கடலிலேயே இறந்து-போவோம். ஆனால், எங்கள் நாட்டில் சிங்களப் படை-யிடம் சிக்கினால், ஆண்கள் உடல் சிதைந்து சின்னாபின்னமாகி இறக்க வேணும். பெண்கள் இறந்தால், பல ஆண்களின் வல்லுறவுக்கு ஆளாகி இறக்க வேணும். கடலுக்கு அப்படியெல்லாம் சித்ரவதை செய்து கொல்லத் தெரியாதுதானே?

பிழைத்து வந்து அகதியாக வாழ நேர்ந்தாலும், மானத்தோடு இருக்கமுடியும். அதனால்தான் எல்லாவற்றையும் துறந்து, துணிந்து புறப்படு-கிறோம்’’ என்கிற கிறிஸ்டியாவின் வார்த்தைகள் நெஞ்சைச் சுடுகின்றன.

இப்படி ஒவ்வொருவரிடமும் நிறைய சோகங்கள் இருக்கின்றன. உயிரைக் காப்பாற்றித் திட்டில் நம்பிக்கை-யோடு வந்து இறங்குகிற மக்களை இன்னும் அதிக காயப்படுத்துகின்றன விசாரணைகள்.

‘‘தண்ணீரில் நடுங்கிக்கொண்டே வருகிறவர்களுக்கு ஒரு டம்ளர் டீ கொடுக்கக்கூட தனுஷ்கோடியில் வசதி இல்லை. நம் கடற்படையிடம் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, அகதிகளை ஆளரவமற்ற பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்படகுக்-காரர்கள். 24 மணி நேரமும் வந்து குவியும் மக்கள் வெகுதூரம் நடந்து வந்து,கடற்படை-யிடம் சரணடைய வேண்டியிருக்கிறது. பிறகு, காவல் நிலையத்தில் தங்கள் வருகையைப் பதிவு செய்துகொண்டு, வெகு நேரம் காத்திருந்த பிறகே, அவர்கள் மண்டபம் அகதி முகாமுக்கு அனுப்பப்படுகிறார்கள். குழந்தைகள் மீது யாரேனும் இரக்கப்பட்டுக் குடிக்கப் பால் வாங்கித் தந்தால்தான் உண்டு. அகதிகள் விஷயத்தில் அரசு இன்னும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தனுஷ்கோடியில் இறங்கியவர்களை மண்டபம் முகாமுக்கு அழைத்துச்செல்ல எந்த வாகன வசதியும் கிடையாது. மூட்டை முடிச்சுகளோடு குழந்தைகளையும் சுமந்துகொண்டு வெகுதூரம் நடக்க வேண்டிய நிலை. அகதிகளை அலட்சியமாக நடத்தாமல், கொஞ்சமாவது கௌரவ-மாக நடத்த அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்’’ என்கிற ரோஸ்மேரி, அகதிகளுக்கான தொண்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

மீனவர் கூட்டமைப்பைச் சேர்ந்த அருளானந்தம், ‘‘அகதிகளோடு மீனவர்களையும் சேர்த்துப் பந்தாடுகிறது அரசாங்கம்’’ என்று குற்றம் சாட்டுகிறார். ‘‘இலங்கையில் உயிரைப் பணயம் வைத்து அகதிகளை ஏற்றி வருகிற இலங்கைத் தமிழ் மீனவர்கள் அந்நாட்டுக் கடற்படையிடம் சிக்கினால் மரணமோ, சிறைத் தண்டனையோ நிச்சயம். இந்தியக் கடற்படை-யிடம் சிக்கினாலும், அதே பரிசுதான். இரண்டு நாட்டு அரசுகளும், அகதிகள் மீது இரக்கப்படாமல் நடுக் கடலிலேயே கொன்றுவிட வேண்டும் என்று விரும்பு-கிறதா? கிடைக்கிற எந்த மீனவனையும், அகதியையும் விடுதலைப் புலியாகவே சித்திரித்து, விசாரணை என்கிற பெயரில் சித்ரவதை செய்து, படகைப் பறிமுதல் செய்து சிறையில் தள்ளினால், மீனவர்கள் எப்படி அகதிகளைக் காப்பாற்றுவார்கள்? கடல் நடுவில் உள்ள திட்டில் பசியோடும், பயத்தோடும் இருக்கிற சகோதரர்களைக் கனிவோடு ஏற்றிக்கொண்டு ஒரு தமிழக மீனவன் கரைக்கு வந்துவிட்டால், அவனது வாழ்க்கையே முடிந்துவிடும். இரக்கப்படக் கூடாது என்று அரசாங்கமே சொல்வதுதான் வேதனையாக இருக்கிறது. இரண்டு நாட்டு மீனவர்களையும் கைது செய்து கொடுமைப்படுத்துவதை, இரண்டு நாடுகளும் உடனடியாகக் கைவிட வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுக்கிறார் அருளானந்தம். மண்டபம் அகதிகள் சிறப்பு முகாமுக்குள் நுழைந்தால், தங்களுக்கு வழங்கப்படுகிற உதவித் தொகையையும், உணவுப் பொருட்களையும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் அகதிகள்.

‘‘குழந்தைகளுக்கு வழங்கப்படுகிற உதவித்தொகையில் பால் வாங்கவும் ஏலாது. எங்களுக்கு ஏதேனும் உடலுழைப்பு செய்ய வாய்ப்பு ஏற்படுத்-தித் தந்தால், நாங்கள் எங்கள் உழைப்பி-லேயே கொஞ்சம் சுயமரியாதை-யோடு வாழ்ந்துவிடுவோம்’’ என்கிறார்கள் அகதிகள் கண்ணீரோடு.

அகதிகள் வந்திருப்பதாகக் காவல் நிலையங்களிலிருந்து மண்டபம் முகாம் அதிகாரிகளுக்குத் தகவல் வந்துகொண்டே இருக்கிறது. அரசு அலுவலகத்-தில் கோப்புகள் நகரும் விதத்திலேயே மிகவும் மந்தகதியில் நடக்கின்றன வேலை-கள். அகதிகளுக்கு வழங்கப்படுகிற உணவுப் பொருட்-களிலும் முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் இருக்கின்றன. சொந்த நாட்டில் மட்டுமின்றி, வந்த நாட்டிலும் வஞ்சிக்கப்படுகிறார்கள் அப்பாவிகள். ‘‘எங்கள் சகோதர நாடுதானே இந்தியா! எங்கள் நாட்டில் அமைதி ஏற்பட, எங்கள் தமிழ்ச் சகோதரர்கள் உதவி செய்வார்கள்தானே?’’ என்று மூட்டை முடிச்சுகளோடு நம்பிக்கை-யையும் சுமந்தபடி கேட்கிறார்கள் இலங்கைத் தமிழ் அகதிகள்.

தனுஷ்கோடி கடல் அகதிகளின் கண்ணீரால் அதிகமாகவே கரிக்கிறது!

நன்றி: விகடன்

Monday, June 26, 2006

இலங்கை இனவாத அரசைஇந்தியா எச்சரிக்க வேண்டும்!

தமிழ் ஈழப் பகுதிகளில் ‘இனப்படுகொலை’ நடத்திட தயார் ஆகிவிட்டது; இலங்கை பேரினவாத சிங்கள அரசு. இலங்கை இராணுவத்தின் போர் விமானங்கள், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், குறிப்பாக - திரிகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் விடுதலைப் புலிகளின் தலைமையகம் இயங்கும் கிளிநொச்சியிலும் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. வடகிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள சுனாமி அகதிகள் முகாமிலும் குண்டு வீசப்பட்டுள்ளது.

நார்வே நாட்டின் முன் முயற்சியுடன் நடைபெற்று வரும் அமைதி நடவடிக்கையை சீர்குலைக்கும் விதத்தில் ஈழத் தமிழர் மீது இலங்கை அரசு, போர் தொடுத்துள்ளது. அதற்கு இலங்கை அரசு தெரிவிக்கும் காரணம், ஜூன் 15 ஆம் தேதி, சிங்களவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அனுராதபுரம் மாவட்டத்தில் பயணிகள் பேரூந்து கண்ணிவெடியில் சிக்கி 64 பேர் பலியானதுதான் என்று கூறி உள்ளது.

அனுராதபுரத்தில் அப்பாவி சிங்கள மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், தங்கள் மீது இலங்கை அரசு கூறி உள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். அரசியல் ஆதாயத்திற்காக தங்கள் மீது வீண்பழியைச் சுமத்தி இலங்கை அரசு, தமிழர்கள் மீது போர் தொடுத்து உள்ளதாக விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு, விடுதலைப்புலிகளின் மீது முப்படைத் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. சிங்கள இராணுவத்தின் தாக்குதலால் ஏராளமான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பேசாலை கடற்கரையில் இலங்கைக் கடற்படையினர், பொதுமக்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 30 பேர் படுகாயமுற்று, உயிருக்குப் போராடி வருகின்றனர். உயிருக்குப் பயந்து பேசாலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த மக்கள் மீதும், ஈவு இரக்கமற்ற சிங்களக் கடற்படையினர் நடத்திய தாக்குதலால் அய்ந்து பேர் பலியாயினர். கருணையே வடிவான இயேசு திருச்சபையில் சிங்கள இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்துவதும், குண்டுகள் வீசுவதும் வாடிக்கை ஆகிவிட்டது. 1998 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் நவாலியில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தின் மீது நடத்திய கொலை வெறித் தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 168 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைகளுக்காக போராடியவரும், ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துக் குரல் கொடுத்தவருமான, ஜோசப் பரராஜசிங்கம், கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி, மட்டக்களப்பில் உள்ள மரியாள் தேவாலயத்தில், நள்ளிரவில் கிறித்தும° வழிபாட்டில் கலந்து கொண்டபோது சுட்டுக் கொல்லப்பட்டார். மகிந்தா ராஜபக்சேவின் இனவெறி அரசு, விடுதலைப்புலிகள்தான் படுகொலை செய்தனர் என்று பழி சுமத்தியது.

2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் நாளிலிருந்து விடுதலைப்புலிகள் தன்னிச்சையாக அறிவித்த போர் நிறுத்த உடன்பாட்டை, இலங்கை அரசு ஏற்றுக் கொண்டதைப் போன்று சர்வதேச நாடுகளை ஏமாற்றுவதற்காக நாடகம் ஆடியது. கிழக்குப் பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக ‘கருணா’ தலைமையில் துரோகக் குழுவை உருவாக்கி, ஆயுதம் கொடுத்து, புலிகள் மீது தாக்குதல் நடத்த ஏவி விட்டது. போர் நிறுத்த உடன்பாட்டை சீர்குலைத்து, புலிகள் மீது சர்வதேச சமூகம் குற்றம் சாட்டுவதற்காக, சிங்கள அரசு துரோகக் குழுவின் மூலம் சதிச் செயல்களை அரங்கேற்றியது.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்குக் காரணமான அதே துரோகக் குழுவின் வெறிச்செயலின் விளைவுதான், அனுராதபுரத்தில் கண்ணிவெடி வைத்து பேருந்து தகர்க்கப்பட்டு 64 பேர் பலியான கொடூரமாகும். அனுராதபுரத்தில் பேருந்து தகர்க்கப்பட்ட சம்பவம் நடந்த அன்றே கிளிநொச்சியில் பேருந்து ஒன்றினை குறி வைத்து கண்ணிவெடி வைக்க முற்பட்ட சந்தேகத்திற்குரிய இருவர் பிடிபட்டனர். அவர்கள் துரோகக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அரசு விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தி, அதையே காரணமாக்கி ‘‘இனப்படுகொலை’ நடத்திட முப்படைத் தாக்குதலைத் தொடங்கி விட்டது.

சிங்கள அரசின் இராணுவத்தாக்குதலுக்கு அஞ்சி, ஈழத் தமிழர்கள் தஞ்சம் தேடி தமிழகத்திற்கு, வரத் தெடங்கி உள்ளனர். இதுவரை மூவாயிரம் ஈழத் தமிழர்கள் ‘தாயின் மடி’எனக் கருதி தமிழ்நாட்டிற்கு, அலைகடலில் ஆபத்தானப் பயணம் மேற்கொண்டு வந்துள்ளனர். கடல் பயணத்தின்போது படகு கவிழ்ந்து நடுக்கடலில் ஈழத் தமிழர்கள் குடும்பத்துடன் பலியாகி வரும் செய்திகள் நம் இதயத்தில் இரத்தம் கசியச் செய்கின்றன.

தொப்புள்கொடி உறவால் தமிழகம் நோக்கி வரும் ஈழத் தமிழர்களை, பாதுகாத்து பத்திரமாக கரைசேர்க்க இந்திய அரசாங்கத்தின் கடலோரக் காவல்படை, உரிய நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும். தஞ்சம் என வந்த ஈழத் தமிழர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை அளித்து, மனிதாபிமானத்துடன் நடத்திட மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும்.

2004 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட இலங்கை அதிபர் சந்திரிகா, இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்பாடு செய்துகொள்ள முயன்றார். இந்தியா - இலங்கை பாதுகாப்பு உடன்பாடு குறித்தத் தகவல்கள் வெளியானதும், மறுமலர்ச்சி தி.மு.கழகம் அதனைக் கடுமையாக எதிர்த்தது.

இலங்கைக்கு இராணுவ உதவிகள் எதையும் செய்யக்கூடாது என்றும், சிங்கள விமானங்கள் 1995 ஆம் ஆண்டு தமிழர்கள் மீது குண்டு வீச தளமாக பயன்பட்ட பலாலி விமானத் தளத்தை சீரமைக்க இந்தியா உதவிடக் கூடாது என்றும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் மறுமலர்ச்சி தி.மு.க. கோரிக்கை வைத்தது. அதன் விளைவாகவே உத்தேசிக்கப்பட்ட இந்திய இலங்கை இராணுவ கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் தடுக்கப்பட்டது.

ஆனால், இலங்கை அரசாங்கத்திற்கு நவீன ராடார் கருவிகளை வழங்கிய இந்திய அரசு - சீனா, பாகி°தான் நாடுகளிடம் இலங்கை அரசு உதவி நாடாமல் தடுப்பதற்குதான் இந்த நடவடிக்கை என்று சமாதானம் கூறியது. இலங்கை அரசு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தாது என்றும் இந்தியப் பிரதமர் வாக்குறுதி அளித்தார். ஆனால், இலங்கை அரசு, இந்தியாவின் இராஜதந்திர நடவடிக்கைகளை கேலிக்கூத்தாகக் கருதி என்றும்போல் இன்றும் தமிழர்கள் மீது இனப்படுகொலையை ஏவி இருக்கிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சுமூகமான முறையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திட ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அளிப்பதாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வழங்கிய உறுதிமொழியைக் காப்பாற்ற வேண்டும். நார்வே நாட்டின் அமைதி முயற்சியை சீர்குலைத்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை புலிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள தூண்டி வரும், இலங்கை அரசாங்கத்திற்கு, இந்திய அரசு உடனடியாக எச்சரிக்கை விடுக்க வேண்டும்.

அமைதியை விரும்பும் ஈழத் தமிழர்கள் மீது வலுக்கட்டாயமாக போரைத் திணிக்கும் இலங்கை அரசின் கொலை வெறிச் செயலை தமிழகத்தில வாழும் ஆறுகோடி தமிழர்களும், உலகத் தமிழர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், அமைதியான நல்வாழ்வுக்காகவும், தாய்த்தமிழகம் வீறு கொண்டு எழும் என்பதை இந்திய அரசு புரிந்து கொண்டு, இலங்கை இனவாத அரசை உரிய விதத்தில் எச்சரித்திட வேண்டும் என்பதே நமது கோரிக்கையாகும். உலகெங்கும் உள்ள தமிழர்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.

மு.செந்திலதிபன்
சங்கொலி

Friday, June 23, 2006

‘‘எமது கனவு, மரண பயமற்ற தமிழ் ஈழம்!’’

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் விகடனுக்கு வழங்கிய செவ்வி
-----------------------------------------------------------------------------------

அமைதிக்கான கனவுகளைக் கழுவில் ஏற்றிவிட்டு மறுபடி ஆரம்பித்துவிட்டது ஆயுதங்களின் கோரத் தாண்டவம். குழந்தைகளின் கண்முன்னே தாய்மார்கள் பாலியல் வன்முறை செய்யப்படும் பெரும் துயரம், பிறப்புறுப்பில் வெடி வைத்துக் கொல்லப்படும் குரூரம், எப்போது ஷெல் வந்துவிழுமோ என பதுங்கு குழிகளில் பயந்து தவிக்கிற அவலம்... யுத்தத்தின் கொடூரமான இருட்டு ஈழத்தைச் சூழ்ந்திருக்கிறது.

ஒரு பக்கம் சிங்கள ராணுவம் வெறித்தனமான தாக்குதலைக் கட்ட-விழ்த்துவிட, புலிகளும் இன்னொரு ‘ஓயாத அலை’களுக்கு ஆக்ரோஷமாகத் தயாராகிறார்கள். இந்த நெருக்கடியான நிலையில், கிளிநொச்சியில் இருக்கும் விடுதலைப் புலிகளின் தலைமை அலுவலகத்தில், ஆலோசனையில் இருந்த புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியிலிருந்து...

‘‘நான்காண்டு கால அமைதி முயற்சிகள் குலைந்து மீண்டும் யுத்த சூழல் உருவாக யார் காரணம்?’’

‘‘சிங்கள அரசாங்கமும், சிங்கள இனவாதிகளுமே காரணம். 2002&ல் ஈழத்தில் ஆக்கிரமித்திருந்த சிங்கள ராணுவத்தை முறியடித்து பல ராணுவ வெற்றிகளை புலிகள் ஈட்டிய போது, இலங்கை அரசு அடி பணிந்து பேச்சுவார்த்தைக்கு வந்தது. நார்-வேயின் அனு-சரணையோடும் சர்வதேச சமூகத்--தின் ஆதரவோடும் இரு தரப்பும் ஏற்றுக்-கொண்டு உருவாக்கப்பட்ட விஷயம்-தான் யுத்த நிறுத்த உடன்படிக்கை.

அப்படி இரு தரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதுதான் இப்போது உருவாகியிருக்கும் வன்முறைச் சூழலுக்குக் காரணம். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எமது மக்கள் கொன்று அழிக்கப்பட்டும், சொந்த நிலத்திலிருந்து விலகி, அகதிகளாக்கப்பட்ட அவல நிலையிலும் இருக்கிறார்கள். அவர்களை மீண்டும் சொந்த நிலங்களில் குடியமர்த்தி, அங்கிருந்து ராணுவத்தை விலக்க வேண்டும் என்பது பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். அதை இன்று வரை இலங்கை அரசு செய்யவில்லை. இன்னொன்று, துணைக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பது. ஆயுதங்களைக் களைவதற்குப் பதிலாக, அவர்களுக்கு இன்னும் இன்னும் புதிய ஆயுதங்களைக் கொடுத்து, தமிழர் பகுதிகளில் வன்முறையை ஏவிவிடுகிறது அரசு. இம்மாதிரி நம்பிக்கைத் துரோகங்கள்-தான் இன்றைய வன்முறைச் சூழலுக்கு மிக முக்கியக் காரணம்.’’

‘‘அநுராதபுரத்தில், பேருந்தில் சென்ற 64 பேர் கண்ணிவெடியில் சிக்கிச் சிதறியதற்குப் புலிகள்தான் காரணம் என்று இலங்கை அரசு குற்றம் சுமத்தியிருக்கிறதே?’’

‘‘சிங்கள இனவாதிகள் தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்குமே எதிரானவர்கள். தங்களுடைய சொந்த இனத்துக்குள்ளேயே எத்தனையோ கொலைகளை நிகழ்த்தியவர்கள்தான் அவர்கள். ஜே.வி.பி&யினுடைய கிளர்ச்சி காலகட்டங்களிலேயே ஆயிரக்கணக் கான சிங்கள மக்களை தென்னிலங்கை வீதிகளிலேயே ரப்பர் டயர் போட்டுக் கொளுத்தியவர்கள் அவர்கள். அதுபோலவே சர்வதேச அரங்கில் ஏற்பட்டு வரும் நல்லெண்ண மாற்றங்களை இல்லாதொழிக்கவும், ஒஸ்லோ பேச்சில் புலிகள் தமது நிலையைத் தெளிவுபடுத்திப் பேச்சுக்களை வெற்றிகரமாக முடித்து வந்ததைக் கொச்சைப் படுத்தும் நோக்கத்துடனும், துணைக் குழுக்களைப் பயன்படுத்தி, இப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்தி புலிகள் மீது பழி போடுகின்றனர். பேருந்து தாக்குதல் பற்றி விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளி களைக் கண்டுபிடிக்குமாறு நாம் பகிரங்கமாக வேண்டியிருக்கிறோம். அத்துடன், அந்தப் படுகொலைக்குக் கடுமையான கண்டனத்தையும் மறுப்பையும் வெளியிட்டிருக்கிறோம். அடித்துச் சொல்கிறோம்... அப்பாவி சிங்களர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசின் சதிச்செயலே காரணம்!’’

‘‘முழு அளவிலான ஒரு போருக்குப் புலிகளே இப்போது தயாராக இல்லை. அப்படித் தயாரானால், இலங்கை அரசுடன் சேர்ந்து புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்கா ஈடுபடும் என்கிறார்களே?’’

‘‘நாங்கள் உண்மையான போராளிகள். எமது தேசத்தையும் மக்களையும் எல்லா வகையிலும் பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்யவும் எப்போதும் முழு அளவில் தயா-ராகவே இருக்கிறோம். எமது தாயக மண்ணை மீட்டெடுத்து, எமது மக்களுக்குச் சுதந்திர வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதே விடுதலைப் புலிகளின் லட்சியம். இதில் வெளியார்களின் தலையீட்டை எமது மக்களோ, எமது அமைப்போ, எமது தலைமைப் பீடமோ ஒருபோதும் அனுமதிக்காது. புரிந்துகொள்ளுங்கள்... நாங்கள் எந்த நாட்டுக்கும், இனத்-துக்கும் எதிரானவர்கள் அல்ல. எமது சொந்தத் தாயகத்தில் பூர்விக-மாக வாழ்ந்த மண்ணில், சகல உரிமைகளையும் பெற்றுப் பிற தேசங்களில் மக்கள் எப்படி வாழ்-கிறார்களோ அப்படி ஒரு வாழ்வை உறுதி செய்யவே போராடு கிறோம்.

அமெரிக்கா உட்பட அது எந்த நாடாக இருந்தாலும் சரி, தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தைப் புரிந்து ஏற்றுக்-கொண்டு அங்கீகரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். மற்றபடி, இதில் தலையீடு செய்து பலவீனப்படுத்த முனைவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை.’’

‘‘ஐரோப்பிய யூனியனும் இப்போது விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக அறிவித்து தடைசெய்திருக்கிறார்களே? இதை எப்படி எதிர்கொள்ளப் போகி-றீர்கள்?’’

‘‘இலங்கை அரசாங்கம் தனது ராஜதந்திர அழுத்தங்களையும், பொய்யான பிரசாரங்-களையும் பயன்படுத்தித் தவறான வழியில் ஐரோப்பிய யூனியனையும் இன்னும் பல நாடுகளையும் இப்படியான அறிவிப்பை செய்யத் தூண்டியிருக்கிறார்கள். இது தவறானது. ஒரு தலைப்பட்சமானது. இந்த அநீதியான தீர்ப்புகளுக்கும், தடைகளுக்கும் எதிராக அந்தந்த நாடுகளில் வாழும் ஈழ மக்கள் தங்கள் குரல்களை எழுப்பி, உணர்வு களை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நாடுகள் வெகு விரைவில் உண்மையை அறிந்துகொண்டு, தங்களுடைய நிலைப்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வரும் என நம்புகிறேன்.’’

‘‘இந்தியாவிடம் நீங்கள் என்ன எதிர்-பார்க்கிறீர்கள்?’’

‘‘இந்தியா உட்பட எல்லா நாடுகளும் தமிழர்-களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென்பதே எமது மக்களுடைய விருப்பமும், எமது விருப்பமும் ஆகும். இந்தியாவைப் பொறுத்த வரை, தனது அயல்நாடொன்றில் இனப் படு-கொலைகள் நடக்கிறபோது, பாதிக்கப்படும் இனத்துக்குத் தார்மிக ஆதரவைக் கொடுத்-திருக்கிறது. பாலஸ்தீனப் போராட்-டத்தை ஆதரித்ததைப் போல, நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக நடந்த ஜனநாயகக் கிளர்ச்சியை ஆதரித்ததைப் போல எமது மக்களின் தார்மிகப் போராட்டத்தையும் அபி-லாஷைகளையும் புரிந்துகொண்டு, இந்தியா தனது ஆதரவை வெளிப்படுத்த-வேண்டும் என்பதுதான் எமது விருப்பம்.’’

‘‘தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் பங்கு பெறுவீர்களா, அல்லது யுத்தம்-தானா?’’

‘‘யுத்த நிறுத்த உடன்பாடு தற்போது கேள்விக்குறியான நிலையில்தான் உள்ளது. எம்மைப் பொறுத்தவரையில், நாங்கள் இந்த உடன்பாட்டை முறித்துக் கொண்டு யுத்தத்துக்குச் செல்ல விரும்ப வில்லை. இருந்தாலும், சிங்கள அரசு இப்போது எங்கள் மக்கள் மீது பெரிய-தொரு இனப் படுகொலையையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டுள் ளது. புலிகளின் முக்கிய தளங்களையும் மக்களின் குடியிருப்புகளையும் சிங்கள ராணுவம் தொடர்ந்து தாக்க முயற்சித்து வருகிறது. இவற்றைத் தடுத்து நிறுத்த ஒரு தற்காப்பு யுத்தத்தைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்-பட்டுள்ளோம்.

நான் உங்களிடம் கேட்டுக்கொள்வ தெல்லாம் ஒன்றுதான்... சொந்த மண்ணிலேயே நிம்மதி இழந்து, நிர்க்கதியாக நிற்க வேண்டிய கொடுமையான சூழலில் இருக்கும் எம் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். எமது கனவு, லட்சியம், வேட்கை எல்லாம் எம் மண்ணின் விடுதலை. மரண பயமற்று மக்கள் நடமாடும் தமிழ் ஈழம்!’’

நன்றி:விகடன்